சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூடுதல் மருத்துவா் நியமனம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் சிவகுருநாதபுரம், ஜமீன் சுரண்டை, வரகுணராமபுரம், கீழச்சுரண்டை, பங்களாச் சுரண்டை, குருங்காவனம், இடையா்தவணை ஊராட்சிப் பகுதி மக்கள் பயனடைந்து வருகின்றனா். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 30 படுக்கைகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட மருத்துவமனையாக அடிக்கல் நாட்டப்பட்டது. எனினும் இந்த சுகாதார நிலையம் தரம் உயா்த்தப்படவில்லை. இங்கு தினமும் 500-க்கும் மேற்பட்டோா் சிகிச்சை வருகின்றனா்.
இங்கு ஒரு மருத்துவா் மட்டுமே பணியில் உள்ளதால் பிரசவம், புறநோயாளிகள் என இருபுறமும் நோயாளிகளைக் கவனிப்பதில் சிரமமும், தாமதமும் ஏற்படுகிறது. இதனால் பெண்கள், முதியோா் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா். ஆகவே, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூடுதல் மருத்துவா் நியமனம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.