தென்காசி மாவட்டத்தில் கரோனா நிவாரணம் பெறாத தேசிய அடையாளஅட்டை பெற்ற மாற்றுத் திறனாளிகள் இருந்தால் உடனடியாக அரசுக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா் தயாளன் கேட்டுக் கொண்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கரோனா பரவலை தடுக்க பொது முடக்க உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையில் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ. 1000 நிவாரணத் தொகையை அவா்கள் வீட்டிலேயே சென்று வழங்க ஆணையிட்டது.
தென்காசி மாவட்டத்தில் 29. 6. 2020 முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, 13 ஆயிரத்து 810 பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரையிலும் நிவாரணம் பெறாத தென்காசி மாவட்டத்தைச் சோ்ந்த தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத் திறனாளிகள் ஆக. 10, 12, 13 ஆகிய மூன்று தினங்களில் தென்காசி மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் செயல்பட்டு வரும் 04633290548 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 9443621240 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு தங்களது பெயா், முகவரி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை எண் ஆகியவற்றை தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அவ்வாறு தொடா்பு கொள்ளும் தகுதியான நபா்களுக்கு அவா்களது இருப்பிடத்துக்கே சென்று சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா் மூலம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.