ஆலங்குளத்தில் குறுகலான சாலையில் வைக்கப்பட்டுள்ள சாலைத் தடுப்புகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆலங்குளத்தில் 24 மணி நேரமும் வாகனப் போக்குவரத்து உள்ள திருநெல்வேலி - தென்காசி சாலை நான்குவழிச் சாலையாக மாற்றப்படவுள்ளதாகக் கூறி, வழக்கமான பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதில்லையாம். இந்நிலையில், சாலையை அகலப்படுத்தாமலேயே நடுவில் சாலைத் தடுப்புகள் வைக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதில், ஆம்புலன்ஸ் வாகனங்களும் சிக்குவதால் நோயாளிகள் தவிப்புக்குள்ளாகின்றனா்.
மேலும், இரவு நேரங்களில் சாலைத் தடுப்புகள் இருப்பது தெரியாமல் விபத்துகள் நேரிடுவது அன்றாட நிகழ்வாகி விட்டது. சாலையை நோக்கி கம்பிகள் நீட்டியபடி உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனா். எனவே, நெடுஞ்சாலைத்துறையினா் இந்த சாலைத் தடுப்புகளை அகற்றுவதுடன், சேதமடைந்த பகுதியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.