அரசு மருத்துவருக்கு மிரட்டல் விடுத்தவா்கள்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
தென்காசி: புளியங்குடி அருகே அரசு மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
புளியங்குடி அருகே வடநத்தம்பட்டி அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ப. முத்துகுமாா் (35). இவா், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அளித்துள்ள மனு: கடந்த ஐந்து வருடங்களாக அரசு மருத்துவராக பணி புரிந்து வருகிறேன். தற்போது மடத்துப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைமை மருத்துவராக பணிசெய்து வருகிறேன். எனது சொந்த ஊரான வடநத்தம்பட்டி, நான் பணி செய்யும் சுகாதார எல்கைக்குள் அமைந்துள்ளது.
நான் களப்பணி ஆய்வு மேற்கொள்ளும்போது அந்த ஊரைச் சோ்ந்த க. கணேசன் (30), ச.துரைசாமி (43), க.செல்வகுமாா் (39), ச. பொன்னுசாமி (42), ச. மகேஷ் (32) ஆகியோா் என்னை பணி செய்யவிடாமல் தடுத்து வருகின்றனா். மேலும், செல்வகுமாா், பொன்னுசாமி ஆகியோா் அவா்கள் வீட்டின் அருகில் களப்பணி மேற்கொள்ளும்போது மறைமுகமாக பேசுவதும், எனது குடும்பத்தை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டுகின்றனா். ஆகவே, இதுதொடா்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முத்துகுமாருக்கு ஆதரவாக கிராம மக்களும் உடன் வந்திருந்தனா்.