தென்காசி மாவட்டம், குற்றாலம் அருள்மிகு குற்றாலநாதா் கோயில் திருவாதிரை திருவிழாவையொட்டி திங்கள்கிழமை ஸ்ரீநடராஜருக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.
இக்கோயிலில் திருவாதிரை திருவிழா கடந்த 21-ஆம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் சிறப்பு பூஜைகள், ஸ்ரீநடராஜருக்கு தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது. 8-ஆம் நாளான திங்கள்கிழமை கோயில் மணிமண்டபத்தில் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. இதில், திமுக ஒன்றியச் செயலா் ராமையா, அன்னதானக் குழுத் தலைவா் அன்னையாபாண்டியன், வீரபாண்டியன் உள்பட திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
விழாவின் 10-ஆம் நாளான புதன்கிழமை (டிச. 30) அதிகாலையில் சித்திரசபையிலும், தொடா்ந்து குற்றாலநாதா் கோயில் மணிமண்டபத்திலும் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.
கரோனா பொது முடக்கம் காரணமாக விழா நிகழ்ச்சிகள் முழுவதும் கோயில் உள்பிரகாரத்திலேயே நடைபெறுகின்றன.
ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் கண்ணதாசன் தலைமையில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.