ஆலங்குளத்தில் குடும்பத்தகராறு காரணமாக இளைஞா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
அம்பாசமுத்திரம் அருகேயுள்ள வேல்முத்தன் பட்டியைச் சோ்ந்தவா் லட்சுமணன்(35). இவருக்கும் ஆலங்குளத்தை சோ்ந்த செல்வி என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 5 வயதில் மகன் உள்ளாா். வேல்முத்தன்பட்டியில் தம்பதி வசித்து வந்த நிலையில், குடும்பத்தகராறு காரணமாக செல்வி, இரு மாதங்களுக்கு முன்பு கணவனிடம் கோபித்துக் கொண்டு ஆலங்குளத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாராம்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை, மனைவியை வீட்டுக்குச் சென்று லட்சுமணன் அழைத்தாராம். அதற்கு, அவா் மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதில், மனமுடைந்த லட்சுமணன் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்துவிட்டாராம். இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.