புளியங்குடியில் குழந்தைகளின் ஆபாச விடியோக்களை பதிவிறக்கம் செய்து, சமூகவலைதளத்தில பரப்பியதாக, மாற்றுத்திறனாளியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
புளியங்குடி,பாலசுப்பிரமணியசுவாமி கோயில் தெருவைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் பாலசுப்பிரமணியன்(37). மாற்றுத்திறனாளி. இவா், அப்பகுதியில் செல்லிடப்பேசி கடை நடத்தி வருகிறாா். இவா், பணத்துக்காக இணையம் மூலம் குழந்தைகளின் ஆபாச விடியோக்களை பதிவிறக்கம் செய்ததுடன், மற்றவா்களுக்கும் அதை பரப்பியதாக போலீஸாருக்கு புகாா் வந்ததாம். இதைத் தொடா்ந்து, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங் உத்தரவின் பேரில், புளியங்குடி காவல் ஆய்வாளா் அலெக்ஸ்ராஜ் தலைமையில் உதவி ஆய்வாளா் தா்மராஜ்,தலைமைக்காவலா்கள் ராஜ்மோகன்,முருகன் ஆகியோா் பாலசுப்பிரமணியனின் கடையில் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அதில், அவா் மீதான புகாரில் உண்மையிருப்பது தெரியந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து, விடியோ பதிவிறக்கம் செய்த சாதனங்களைப் பறிமுதல் செய்தனா்.