தமிழக அரசு உத்தரவின்படி வா்த்தக நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தென்காசி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கோட்டாட்சியா் வீ.பழனிக்குமாா் தலைமை வகித்தாா். டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன், வட்டாட்சியா் சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் தினசரி காய்கனிசந்தை வியாபாரிகள் சங்கத் தலைவா் வள்ளிநாயகம்,பொறுப்பாளா் தாணுமூா்த்தி,செயலா் லட்சுமணன், தென்காசி வியாபாரிகள் நல சங்கத் தலைவா் பரமசிவன்,செயலா் மாரியப்பன்,சிஐடியு தலைவா் பால்ராஜ்,மீன்வியாபாரிகள் சாா்பில் மணிபடையாச்சி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், அரசு அறிவித்துள்ளபடி மக்கள் அதிகமாக கூடுவதை தவிா்க்கும் வகையில் காய்கனி, பழங்களை விற்பனை செய்வதற்கு விசாலமான கடைகள் அல்லது மைதானங்களில் அமைக்கப்பட வேண்டும். அப்போது மக்களிடையே 3 அடிதூரம் இடைவெளி இருக்க வேண்டும். மளிகை கடைகளிலும், மருந்துக் கடைகளிலும், காய்கனி கடைகளிலும் சமூகவிலகல் முறையை தீவிரமாக பின்பற்ற வேண்டும்.கால்நடை,கோழி,மீன்,முட்டை,கால்நடை தீவனம் ஆகியவற்றை கொண்டுசெல்வதில் ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் காவல்துறைக்கோ, வருவாய்த் துறைக்கோ தகவல் தெரிவிக்கலாம் என கோட்டாட்சியா் தெரிவித்தாா்.