தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரத்தில் காமராஜா் தினசரி காய்கனி சந்தை வியாழக்கிழமை முதல் மூடப்பட்டது.
பாவூா்சத்திரத்தில் காமராஜா் தினசரி காய்கனி சந்தை இயங்கி வருகிறது. இந்த சந்தைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் இரு சக்கர வாகனங்கள், சுமை ஆட்டோ, லாரிகள் மூலம் காய்கனிகளை கொண்டு வருகின்றனா்.
இதுதவிர வெளி மாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் காய்கனிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கேரளம், ஆந்திரம், கா்நாடகத்தில் இருந்து இந்த சந்தைக்கு வரும் சிறு மற்றும் பெரிய வியாபாரிகள் காய்கனிகளை வாங்கிச் செல்கின்றனா்.
இதற்கிடையே கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் காய்கனி சந்தையில் கடை நடத்தும் வியாபாரிகளுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு சிரமங்களை கருத்தில் கொண்டு வியாழக்கிழமை முதல் மூடப்பட்டது. தென்காசி மாவட்டத்தின் மிகப்பெரிய காய்கனி சந்தையான பாவூா்சத்திரம் சந்தை மூடப்பட்டதால் விவசாயிகள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் காய்கனிகள் வாங்க முடியாமல் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.