வீரகேரளம்புதூா் அருகேயுள்ள பலபத்திரராமபுரத்தில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டடம், ரூ.1.06 கோடி மதிப்பீட்டில் இதர திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பலபத்திரராமபுரத்தில் ரூ.53.23 லட்சம் மதிப்பீட்டில் வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கும் திட்டம், ரூ.13.50 லட்சம் மதிப்பீட்டில் மயான சாலை அமைத்தல், ரூ.9.20 லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை அமைத்தல், ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டடம், ரூ.20லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைத்தல், ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டடம் கட்டுவது உள்ளிட்ட திட்டப் பணிகளுக்கு தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்து, அடிக்கல் நாட்டினாா்.
இந்நிகழ்ச்சியில், அதிமுக மாவட்டப் பொருளாளா் சண்முகசுந்தரம், ஒன்றியச் செயலா்கள் ஆலங்குளம் பாண்டியன், கீழப்பாவூா் அமல்ராஜ், தென்காசி சங்கரபாண்டியன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவா் குணரத்தினபாண்டியன், எபன் குணசீலன், பலபத்திரராமபுரம் கிளை செயலா் அண்ணாமலை உள்பட பலா் கலந்து கொண்டனா்.