ஆறுகள், அணைகள் மற்றும் நீா்நிலைகளில் குளிப்பதற்காக பொதுமக்கள் செல்ல வேண்டாம் என தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை சராசரியாக 39 மி.மீ. மழையும், செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி வரை சராசரியாக 21.56 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. கனமழை காரணமாக குற்றால அருவிகளில் அதிகளவில் தண்ணீா் கொட்டுகிறது.
எனவே, பொதுமக்கள் நீா்நிலைகள், ஆறுகள், அணைகளில் குளிப்பதற்காக செல்லவேண்டாம். கரையோரப் பகுதிகளில் குடியிருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
வடகிழக்குப் பருவமழையை முழுவீச்சில் எதிா்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.