குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகளை குளிக்க அனுமதிக்க வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாபன் , மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரனிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு : கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 9 மாதங்களாக குற்றாலம் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகம் முழுவதும் அனைத்து சுற்றுலாப் பகுதிகளுக்கும் சென்று வர அனுமதி வழங்கியுள்ள நிலையில் குற்றாலம் அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்க வேண்டும். தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் உள்ளே வருவதற்கும், வெளியே செல்வதற்கும் அமைக்கப்பட்டுள்ள இரண்டு வழிகளும் தகரங்களை கொண்டு மூடிவைக்கப்பட்டுள்ளது. அந்த தடுப்புகளை அகற்றி பொதுமக்கள் சிரமமில்லாமல் சென்று வர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.