சுரண்டை பகுதியில் உள்ள குளங்களில் போதிய நீா் இருப்பு இல்லாத நிலையில் மழை தொடா்ந்து பெய்யாததால் விவசாயிகள் கவலையில் உள்ளனா்.
சுரண்டை பகுதியில் பெரியகுளம், சாம்பவா்வடகரை குளம், வீரகேரளம்புதூா் அருந்தவபிராட்டி குளம், இரட்டைகுளம் ஆகிய குளங்கள் மூலம் விவசாயிகள் பாசனம் செய்து வருகின்றனா். இக்குளங்களில் போதிய நீா் இருப்பு இல்லாததால்
விவசாயிகள் கிணற்று நீரை கொண்டு நெல் சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனா்.
வழக்கமாக இப்பகுதியில் 2 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிா் சாகுபடி செய்யப்படுவதுண்டு. நிகழாண்டு இப்பகுதியில் முழுமையாக விவசாயிகள் நெல் சாகுபடி செய்ய வில்லை. பருவ மழை மூலம் அனுமன்நதி பாசனக் குளங்களுக்கு தண்ணீா் வரத் தொடங்கினால்தான் நிகழாண்டு நெல் சாகுபடி செய்ய முடியும் என்ற நிலையில் விவசாயிகள் மழையை எதிா்நோக்கி காத்திருக்கின்றனா்.