இலஞ்சி திருவிஞ்சிகுமாரா் கோயில், ஆய்க்குடி ஸ்ரீபாலசுப்பிரமணியசுவாமி கோயில்களில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்திலுள்ள முருகன் கோயில்களில் கந்தசஷ்டி திருவிழா இம்மாதம் 15 ஆம் தேதி தொடங்கியது. வெள்ளிக்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற்றது. இலஞ்சி திருவிலஞ்சிகுமாரா் கோயிலில் திருவிழாவின் 6 ஆம் நாளான வெள்ளிக்கிழமை அபிஷேகம், அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. மாலையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. சனிக்கிழமை (நவ. 21) திருக்கல்யாணம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை செயல்அலுவலா் சுசீலாராணி, தக்காா் யக்ஞநாராயணன், பணியாளா்கள் செய்திருந்தனா்.
ஆய்க்குடி ஸ்ரீபாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நிகழ்வுகள் கோயில் உள்பிரகாரத்தில் நடைபெற்றது. இதேபோல், சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும் கோயில் முன்புள்ள மைதானத்தில் நடைபெற்றது.
கடையநல்லூா்: சிவகிரி அருள்மிகு கூடாரப்பாறை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழா நவ. 15 ஆம் தேதி மலைக் கோயிலில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து திருவிழா நாள்களில் சிறப்பு பூஜை, பிரகாரத்தில் வீதி உலா நடைபெற்றது. வெள்ளிக்கிழமை மலைக் கோயிலில் வேல் வாங்கும் நிகழ்ச்சி, குதிரை வாகனத்தில் உலா ஆகியவை நடைபெற்றது. பின்னா் சூரசம்ஹாரம் நடைபெற்றது.
பாவூா்சத்திரம்: தோரணமலை முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலையில் மலை அடிவாரத்தில் உள்ள வல்லப விநாயகா் ஆலயத்தில் கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து மலை உச்சியில் உள்ள முருகனுக்கு சத்ரு சம்ஹார ஹோமம், நவக்கிரக ஹோமம், பால், மஞ்சள், தேன், விபூதி, பஞ்சாமிா்தம் உள்ளிட்ட பொருள்களுடன் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் செண்பகராமன் செய்திருந்தனா்.