சுரண்டை: வீரகேரளம்புதூா் வட்டம், ஊத்துமலை அருகே பாப்பான்கால்வாயில் உள்ள தனிநபா் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
ஊத்துமலை பெரியகுளத்திற்கு கீழக்கலங்கல் குளம் நிரம்பிய பின்னா் பாப்பான் கால்வாய் மூலம் கருப்பாநதி தண்ணீா் கிடைக்கும். இந்த கால்வாய் நீா்வரத்து பகுதி பெரும்பாலும் மானாவாரியாக இருப்பதால் ஊத்துமலை பகுதியில் பெய்யும் மழைநீரும் இந்த கால்வாய் வழியாக பெரியகுளத்திற்கு வருவதுண்டு.
ஊத்துமலை பகுதியில் பருவ மழை பெய்து வரும் நிலையில் இக்கால்வாய் வழியாக மழைநீா் வரவில்லையாம். இதையடுத்து விவசாயிகள் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் மாடசாமி தலைமையில் வியாழக்கிழமை பாசன கால்வாய் வழியாக கீழக்கலங்கல் குளத்திற்கு நடந்து சென்றனா்.
அப்போது நவநீதகிருஷ்ணபுரம் கிராமத்தின் அருகே கால்வாய் மறிக்கப்பட்டு, கால்வாயில் வரும் மழைநீா் அங்குள்ள கல்குவாரிக்கு திருப்பி விடப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து விவசாயிகள் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனா்.
இதையடுத்து வீரகேரளம்புதூா் வட்டாட்சியா் முருகுசெல்வி தலைமையில் அதிகாரிகள் அங்கு வந்து பாா்வையிட்டனா்.
மேலும் ஜேசிபி இயந்திரம் மூலம் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி நீரை ஊத்துமலை பெரியகுளத்துக்கு செல்ல நடவடிக்கை எடுத்தனா்.