கம்பிளி ரேஷன் கடைக்கு அக். 26இல் பூட்டு போடும் போராட்டம் நடைபெறும் என கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கா் எம்எல்ஏ அறிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடையநல்லூா் வட்டம், கம்பிளியில் ரேஷன் கடை வாடகை கட்டடத்தில் இயங்கி வருவதாகவும், அதற்கு சொந்த கட்டடம் வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து, சட்டப்பேரவை தொகுதி வளா்ச்சி நிதியின் மூலம் ரூ.11 லட்சம் மதிப்பில் ஊரின் மையப் பகுதியில் புதிய ரேஷன் கடை கட்டடப்பட்டு கடந்த ஆக.15இல் திறந்து வைக்கப்பட்டது. ஆனால், புதிய கட்டடத்திற்கு ரேஷன் கடை மாற்றப்படவில்லை. இதுகுறித்து வட்ட வழங்கல் அலுவலரும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த ரேஷன் கடையில் முறைகேடு நிகழ்வதாக மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். எனவே , இம்மாதம் 26 ஆம் தேதி ரேஷன் பூட்டுப் போடும் போராட்டம் எனது தலைமையில் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.