கடையநல்லூா்: கடையநல்லூா் நகராட்சிப் பகுதியில் தேவையின்றி உள்ள வேகத் தடைகளை அகற்றுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடையநல்லூா் நகராட்சிப் பகுதிகளில் பல தெருக்களில் தனிநபா்கள் மூலமாக வேகத் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறு உருவாகி வருவதாகவும், அவற்றை அகற்ற வேண்டுமெனவும், பல்வேறு தரப்பினா் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதையடுத்து, இது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வட்டாட்சியா் பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையா் குமாா்சிங், நகராட்சி பொறியாளா் முரளி, நகரமைப்பு ஆய்வாளா் கிருஷ்ணகுமாா், சுகாதார ஆய்வாளா்கள் மாரிச்சாமி, சேகா், காவல் உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
இதில், தேவையின்றி அமைக்கப்பட்டுள்ள வேகத் தடைகளை அகற்றுவது எனவும், முக்கியப் பகுதிகளில் மட்டும் நகராட்சி மூலம் வேகத் தடைகள் அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.