தமிழ்நாடுபிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள பிற்படுத்தப்பட்டோா் , மிக பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சோ்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் வங்கிக் கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ஜி.கே.அருண்சுந்தா்தயாளன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதிய ஆழ்துளை கிணறு அமைத்து பாசன வசதி ஏற்படுத்திக் கொள்ள அதிகபட்சம் ரூ . 1 லட்சம் வரை வங்கிக் கடன் மற்றும் அதற்கு இணையான 50 சதவீத அரசு மானியம் அதிக பட்சமாக ரூ. 50 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற சாதி, வருமானம் , இருப்பிடச் சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரா் சிறு குறு விவசாயி என்பதற்கான சான்றினை வட்டாட்சியரிடமிருந்து பெற வேண்டும். நில உடமைக்கு ஆதாரமாக கணினி வழி பட்டா மற்றும் அடங்கல் நகல் இருக்கவேண்டும்.
தகுதியுடைய விவசாயிகள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலஅலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.