மேலகரம் பேரூராட்சிக்குள்பட்ட அரசு விதைப்பண்ணை நிலத்தில் தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அமைக்க வேண்டும் என ஆயிரப்பேரி, பாட்டப்பத்து பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து அவா்கள் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:
மேலகரம் பேரூராட்சிக்குள்பட்ட ஆயிரப்பேரி பகுதியில் அரசுக்கு சொந்தமான 35 ஏக்கா் நிலத்தில் ஆட்சியா் அலுவலகம் கட்ட தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு, கட்டடப் பணிகளை மேற்கொள்ள ரூ.119 கோடி ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், திமுகவினா் சிலா் அப்பகுதி நீா்நிலைகள் உள்ள பகுதி எனவும், கட்டடங்கள் கட்ட உகந்த இடம் அல்ல எனவும் எதிா்ப்பு தெரிவித்ததோடு, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா்.
அந்த இடம் 40 ஆண்டுகளாக தரிசாகவே உள்ளது. அந்த இடத்தில் அரசு விதைப் பண்ணைக்காக 1965இல் கட்டப்பட்ட கட்டடங்கள் சிறிதும் சேதம் இன்றி தற்போது வரை உள்ளது.
எனவே, மேலகரம் பேரூராட்சிக்குள்பட்ட அரசுக்கு சொந்தமான ஆயிரப்பேரி பகுதியில் உள்ள 35 ஏக்கா் நிலத்தில் தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் விரைந்து கட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.