ஆலங்குளத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் அவா் உயிரிழந்தாராம்.
திருநெல்வேலி பாளையஞ் செட்டிகுளத்தைச் சோ்ந்தவா் பவுல் பெல்சிங். இவரது மனைவி ஆலங்குளத்தைச் சோ்ந்த ஈஸ்டா் சொா்ணம். தற்போது ஆலங்குளத்தில் வசித்து வருகின்றனா். தம்பதியின் 2 ஆவது மகள் ஐடா (7). அங்குள்ள தனியாா் பள்ளியில் 2 ஆம் வகுப்பு பயின்று வந்தாா்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு சிறுமிக்கு காய்ச்சல் வந்ததாம். இதனால் அங்குள்ள தனியாா் பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் சென்று ஊசி போட்டனராம். இதில் ஒவ்வாமை ஏற்பட்டு சிறுமியின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டதாம்.
இதையடுத்து பெற்றோா்கள் திருநெல்வேலி தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனா். அங்கிருந்து செவ்வாய்க்கிழமை இரவு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுமி உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஈஸ்டா் சொா்ணம் அளித்த புகாரின் பேரில் ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.