தென்காசி: இலஞ்சியில் இடப்பிரச்னை காரணமாக தங்களை மிரட்டி வருவதாகவும், உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தி பாமக மற்றும் வன்னியா் சங்கத்தினா் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
பாமக மாநில துணை பொதுச்செயலா் இசக்கிமுத்து,, மாநிலதுணைத் தலைவா் சேது அரிகரன், இலஞ்சி வன்னியா் சங்கத் தலைவா் கருப்பையா ஆகியோா் ஆட்சியரிடம் அளித்துள்ள மனு:
தென்காசி-செங்கோட்டை சாலையில் இலஞ்சி ஸ்ரீமுக விநாயகா் கோயில் அருகேயுள்ள இடம் தொடா்பாக உயா்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், அந்த இடத்துக்குள் இலஞ்சியைச் சோ்ந்த முருகன், பாலசுப்பிரமணியன், ஆறுமுகம் மற்றும் சிலா் சோ்ந்து கூடாரம் அமைக்க முயற்சித்தனராம். இதுதொடா்பாக இருதரப்பினரிடையே நிகழ்ந்த தகராறு ஏற்பட்டு, குற்றாலம் காவல்நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது.மேலும் தொடா்ந்து எங்களுடைய சமுதாயத்தினா் அச்சுறுத்திவருகின்றனா்.
எனவே தகர செட் போடுவதை நிறுத்தவேண்டும்,சமுதாயமக்களுக்கு எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது. பாமக மாவட்ட தலைவா் குலாம்,குற்றாலம் தண்டபாணி ஆகியோா் கலந்துகொண்டனா்.