கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு நலத்திட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்குவதற்காக 22 கி.மீ. நடைபயணம் மேற்கொண்டனர்.
தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் விவசாய நிலங்களுக்குச் செல்லும் விவசாயிகள் பயன்படுத்தும் சாலைகளை பயன்படுத்தும் வகையில் சீரமைப்பது, ஒன்றியத்தில் உள்ள ஒரே அரசுப்பள்ளியான முதலியார் பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பல்வேறு பாடத்திட்டங்களைக் கொண்டுவருவது, ஒன்றியத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் உள்கட்டமைப்புகளை செய்வது, ஒன்றியப் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்குவது, கடையத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா அமைப்பது, எலுமிச்சை மற்றும் பூக்கள் சேமிக்க சேமிப்புக் கிடங்கு அமைப்பது, ஊரக வேலைத் திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை விவசாயத் தொழிலுக்கும் பயன்படுத்துவது, ஆழ்வார்குறிச்சியில் சார்பதிவாளர் அலுவலகம் அமைப்பது, கடனாநதி, ராமநதி அணைகளைத் தூர்வாருவது, ராமநதி அணையில் முழுக் கொள்ளவு நீர் தேங்குவதை உறுதிசெய்துவிட்டு ராமநதி மேல் மட்டக் கால்வாயில் தண்ணீர் திறந்துவிடுவதை உறுதிப்படுத்துவது, கடையம் பகுதியில் செயல்பட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை மீண்டும் உருவாக்கி விரிவாக்கம் செய்து செயல்படுத்துவது, ஒன்றியப் பகுதியில் உள்ள அனைத்து குக்கிராமங்களுக்கும் போக்குவரத்து வசதியை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட 27 கோரிக்கைகளை வலியுறுத்தி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் கோரிக்கை நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
நடைபயணத்தில் அம்மா பேரவை மாவட்டச் செயலர் சந்திரசேகர், ஒன்றியச்செயலாளர்கள் முத்துராமன், ஜோசப் செல்வக்குமார், ஆழ்வார்குறிச்சி நகரச் செயலர் அகத்தியன் ஆகியோர் நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பிருந்து தொடங்கி சுமார் 22 கி.மீ. நடைபயணம் மேற்கொண்டு தென்காசியில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு வழங்குகின்றனர்.