செங்கோட்டை அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞருக்கு ஆயுள்தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் உத்தரவிட்டது.
புளியரை பகவதிபுரத்தைச் சோ்ந்தவா் விஜிமோன்(41). ஓய்வுபெற்ற ராணுவ வீரா். செங்கோட்டை காலாங்கரை பகுதியைச் சோ்ந்தவா் பரமசிவம். இவருடைய மகன் பண்டாரம் (27). கூலி வேலை செய்து வருகிறாா்.
விஜிமோனுக்கும், பரமசிவத்துக்கும் இடையே கடந்த 2014ஆம் ஆண்டு ஏற்பட்ட தகராறின்போது, விஜிமோன் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை பரமசிவம் அறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவா்களுக்கிடையே முன்விரோதம் இருந்ததாம்.
இந்நிலையில் கடந்த 11-5-2015 அன்று பரமசிவன் மகன் பண்டாரம், விஜிமோன் வீடு அமைந்துள்ள பகுதிக்கு சென்று, தன்னுடைய தந்தைக்கு கெட்டபெயரை ஏற்படுத்தியதாகக் கூறி விஜிமோனை கத்தியால் குத்திக் கொலை செய்தாராம்.
இதுகுறித்து புளியரை போலீஸாா் வழக்குப் பதிந்து பண்டாரத்தை கைதுசெய்தனா்.
இந்த வழக்கின் மீதான விசாரணை தென்காசி கூடுதல் மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி அனுராதா, பண்டாரத்துக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ. 2ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா்.
அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் எஸ்.சின்னத்துரைபாண்டியன் ஆஜரானாா்.