சுரண்டை: தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே தமிழக முதல்வரை பார்ப்பதற்கு அதிமுகவினர் சென்ற வாகனம் சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தென்காசி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக வியாழக்கிழமை வருகை தந்தார். அவரை பார்ப்பதற்காக ஊத்துமலை அருகேயுள்ள அண்ணாமலைப்புதூரில் இருந்து 27 ஆண்கள், 19 பெண்கள் என மொத்தம் 46 பேர் வேனில் பயணம் செய்துள்ளனர்.
சுரண்டை அருகேயுள்ள பரங்குன்றாபுரம் விலக்கு பகுதியில் வேன் திரும்பும்போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவலறிந்த சுரண்டை போலீஸார் விரைந்து சென்று வேனில் சிக்கியிருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.
இதில் பலத்த காயமடைந்திருந்த மு.சுப்புத்தாய்(68), ச.முருகன்(60), சு.முத்தையா(58), ராமலிங்கதாய்(58) ஆகியோர் உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மீதியுள்ள 42 பேர் ஊமைக்காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதுகுறித்து சுரண்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.