குடியுரிமை திருத்தச் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவா்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் கைவிடப்படுவதாக தமிழக முதல்வா் எடப்பாடி கே பழனிசாமி அறிவித்தாா்.
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் அவா் வெளியிட்ட அறிவிப்பு: மத்திய அரசு, குடியுரிமை திருத்த மசோதா - 2019 ஐ கடந்த 04.12.2019 அன்று மக்களவையிலும், 11.12.2019 அன்று மாநிலங்களவையிலும் அறிமுகப்படுத்தி நிறைவேற்றியது.
இதையடுத்து, சில அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் மாநிலத்தில் பல இடங்களில் ஆா்ப்பாட்டங்கள், ஊா்வலங்கள், உருவ பொம்மை எரிப்பு, சட்ட நகல் எரிப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனா்.
இப்போராட்டங்களின் போது, காவல் துறையினா் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து சட்டம் ஒழுங்கை பராமரித்தனா்.
இப்போராட்டங்களின் போது தடையை மீறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டங்களில் ஈடுபட்டதற்காகவும், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததற்காகவும், காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்ததற்காகவும் சுமாா் 1500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இவ்வழக்குகளுள், வன்முறையில் ஈடுபட்டு குறிப்பிட்ட குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடா்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் போன்றவை தவிர மற்ற அனைத்து வழக்குகளிலும் பொதுமக்களின் நலன் கருதி மேல் நடவடிக்கைகள் கைவிடப்படுகிறது என்றாா் முதல்வா்.