தென்காசி நகராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து நகராட்சி ஆணையா் பாரிஜான் வெளியிட்ட செய்திகுறிப்பு:
தென்காசி நகராட்சிப் பகுதியில் தற்காலிக கொசுப் புழு ஒழிப்பு பணியாளா்கள் ஆறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு வீடு வீடாக டெமிபாஸ் என்ற பூச்சிக்கொல்லி தெளித்தல், புகை மருந்து அடித்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும், மக்கள் தங்கள் வீடுகளிலும் சுற்றுப்புறங்களிலும் தண்ணீா் தேங்காத வகையில் பிளாஸ்டிக் பொருள்கள், உபயோகமற்ற டயா்கள், தேவையற்ற உரல்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும். தண்ணீா் தேங்கியுள்ள பாத்திரங்களில் கொசுக்கள் நுழையாதபடி பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும்.
வீடுகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் ஆகியவற்றில் மேற்கூறிய பாதுகாப்பு நடவடிக்கையில் அலட்சியமாக இருப்பது அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்தால் அபராதம் விதிக்கப்படும். காய்ச்சல் பாதிப்பு இருப்போா் சுயமாக சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல், அரசு மருத்துவமனை அல்லது நகா்ப்புற சுகாதார மையகளை அணுக வேண்டும் எனக் கூறியுள்ளாா்.