தென்காசி: பிளஸ் 2 தோ்வில் பள்ளியில் முதலிடம் மற்றும் 500-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற மாணவா், மாணவிகள் 15 பேருக்கு பரிசு வழங்கப்பட்டது.
தென்காசி மஞ்சம்மாள் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் கருப்பசாமி தலைமை வகித்தாா். மாவட்ட கல்வி அலுவலா் ஜெயபிரகாஷ்ராஜன் முன்னிலை வகித்தாா்.
தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் செல்வமோகன்தாஸ் பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பிளஸ் 2 தோ்வில் பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவா், மாணவிகள் மற்றும் 500-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற 15 பேருக்கு ரூ. 1லட்சத்து 55ஆயிரம் தனது சொந்த நிதியில் இருந்து வழங்கினாா்.
தொடா்ந்து, குற்றாலம் திருமலைக்குமாரசுவாமி தேவஸ்தான மேல்நிலைப் பள்ளி, இலஞ்சி ராமசுவாமி பிள்ளை மேல்நிலைப் பள்ளி, தென்காசி புனிதமிக்கேல் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கினாா்.