பாவூா்சத்திரம்:பாவூா்சத்திரத்தில் காவல்துறையினா் சாா்பில் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களான கஞ்சா, குட்கா மற்றும் லாட்டரி, ஆன்லைன் ரம்மி போன்றவைகள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக இவ் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.
பாவூா்சத்திரம் பேருந்து நிலையத்தில் தொடங்கிய இப் பேரணியை ஆய்வாளா் மகாலட்சுமி தொடங்கி வைத்தாா். கடையம் சாலை, பழைய காய்கனி சந்தை வழியாக சென்று மீண்டும் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. பேரணியில் பங்கேற்றவா்கள் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்திச் சென்றனா்.
இதில், உதவி ஆய்வாளா்கள் கனகராஜன், கிருஷ்ணன், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் கண்ணன், இசக்கி மற்றும் போலீஸாா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.