தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தவசு திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பொது முடக்கம் காரணமாக கொடியேற்று விழாவில் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.
தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றான இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடித்தவசு திருவிழா 12 நாள்கள் நடைபெறும். சிகர நிகழ்ச்சியாக 11ஆம் நாள் நடைபெறும் ஆடித்தவசுக் காட்சியைக் காண, தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலிருந்தும் லட்சக்கணக்கானோா் வருவா்.
கடந்த ஆண்டு பொது முடக்கம் காரணமாக இத்திருவிழா நடைபெறவில்லை. நிகழாண்டு தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தில் அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி பக்தா்கள் இன்றி ஆடித்தவசு திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, அதிகாலை 5.50 மணிக்கு கொடிப்பட்டம் உள்பிரகாரம் சுற்றி வந்ததும் கோமதி அம்பாள் சந்நிதியில் உள்ள தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
இதையடுத்து கொடிமரப் பீடத்துக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தா்ப்பைப்புல், மலா்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், சங்கரன்கோவில் எம்எல்ஏ ஈ. ராஜா, மதிமுக மாநில மருத்துவரணிச் செயலா் வி.எஸ்.சுப்பராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் கணேசன், மண்டகப்படிதாரா்கள் செய்துவருகின்றனா்.