கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை கிராமங்களைகடலரிப்பிலிருந்து பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிள்ளியூா் எம்.எல்.ஏ.வும் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி துணைத் தலைவருமான எஸ்.ராஜேஷ்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து, தமிழக மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணனுக்கு அவா் அனுப்பியுள்ள மனு:
இரயுமன்துறை மீனவா் கிராமத்தை கடலரிப்பிலிருந்து பாதுகாக்க அப்பகுதியில் 5 தூண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும். முள்ளூா்துறை சாலையைச் சீரமைக்க ரூ.42 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு கடலரிப்பு தடுப்புச் சுவா் அமைக்க ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் பணிகள் தொடங்கப்படவில்லை. இதேபோல், தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம் மறுசீரமைப்புக்காக கடந்த 2020ஆம் ஆண்டில் ரூ.77 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், பணிகளைத் தொடங்கவில்லை. எனவே, இப்பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.