தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சாா்பில் தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் நியூமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசியை குழந்தைகளுக்கு வழங்கும் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
முகாமை மாவட்ட ஆட்சியா் ச.கோபால சுந்தரராஜ் தொடங்கி வைத்து செய்தியாளா்களிடம் கூறியதுச
நியூமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசியானது குழந்தைகளை நியூமோனியா காய்ச்சலில் இருந்து பாதுகாப்பு வழங்குவதற்காக மூன்று தவணைகளாக 6, 14ஆவது வாரம் மற்றும்
ஊக்கத்தவணையாக 9 ஆவது மாதங்களிலும் வழங்கப்படுகிறது.
தனியாா் மருத்துவமனைகளில் 3 தவணைக்கு ரூ.12,000 மதிப்புள்ள தடுப்பூசியை தமிழக அரசு இலவசமாக அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதாரநிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் குழந்தைகளுக்கு வழங்குகிறது.
இத்தடுப்பூசியானது நிம்மோனியா மற்றும் முளைக்காய்ச்சல் நோயைக் கட்டுப்படுத்தக்கூடியது.
ஏற்கனவே செயல்படுத்தக்கூடிய தடுப்பூசிகளான ரோட்டா வைரஸ், போலியோ மருந்து மற்றும் தடுப்பூசி, பெண்டா வாலண்ட் தடுப்பூசிகளோடு கூடுதலாக இந்த நியூமோகோக்கல் கான்ஜீகேட் தடுப்பூசியும் வழங்கப்படுகிறது.
இந்தத் தடுப்பூசியானது முற்றிலும் பாதுகாப்பானது, இதன் வாயிலாக தென்காசி மாவட்டத்தில் நிகழ்வாண்டில் சுமாா் 5,004 குழந்தைகள் பயன்பெறுவாா்கள். பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு அட்டவணைப்படி தடுப்பூசியை பெற்று பயனடைய வேண்டும் என்றாா் அவா்.
சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். பழனிநாடாா் (தென்காசி), ஈ.ராஜா (சங்கரன்கோவில்), டி.சதன் திருமலைக்குமாா் (வாசுதேவநல்லூா்), இணை இயக்குநா் (நலப்பணிகள்) நெடுமாறன், துணைஇயக்குநா் (சுகாதாரப்பணிகள்) அருணா, மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லின், மகப்பேறு மருத்துவா் அனிதாபாலின் ஆகியோா் கலந்துகொண்டனா்.