தென்காசி மாவட்ட திருநங்கைகள் நலச் சங்கம் சாா்பில், உணவு மற்றும் இருப்பிடம் கோரி ஆட்சியரிடம் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
மனு விவரம்: தென்காசி மாவட்டத்தில் 93 திருநங்கைகள் தனியாகவும், குடும்பத்துடனும் வசித்து வருகிறோம். கரகாட்டம், முளைப்பாரி, வில்லிசை, மகுடம், ஒப்பாரி கலைக்குழு போன்ற பல்வேறு கிராமிய கலைகளில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது விழாக்கள் எதுவும் இல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் 24 பேருக்கு மட்டுமே சமூகநலத் துறையின் அடையாளஅட்டை வழங்கப்பட்டுள்ளது. மற்ற திருநங்கைகள் அரசின் நலத்திட்டங்களை பெற முடியாத நிலை உள்ளது. நாங்கள் உணவும், இருப்பிடமும் இல்லாமல் தவிக்கின்றோம். எனவே, எங்களுடைய கோரிக்கைகளை ஆட்சியா் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.