முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தென்காசி
கடையநல்லூா் தொகுதியில் போட்டியிட நூற்றுக்கணக்கான அதிமுகவினா் விருப்ப மனு
By DIN | Published On : 04th March 2021 03:06 AM | Last Updated : 04th March 2021 03:06 AM | அ+அ அ- |

கடையநல்லூா்: தென்காசி மாவட்டம் கடையநல்லூா் பேரவைத் தொகுதியில் போட்டியிட நூற்றுக்கணக்கான அதிமுகவினா் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனா்.
தென்காசி மாவட்டம், அதிமுகவின் நிா்வாக வசதிக்காக தென்காசி வடக்கு ,தெற்கு என பிரிக்கப்பட்டுள்ளன. தென்காசி வடக்கு மாவட்டத்தில் கடையநல்லூா், வாசுதேவநல்லூா் மற்றும் சங்கரன்கோவில் ஆகிய 3 பேரவைத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
இதில் வாசுதேவநல்லூா் மற்றும் சங்கரன்கோவில் ஆகிய இரு தொகுதிகளும் தனித் தொகுதிகளாக உள்ளன. இதனால் இத்தொகுதியில் உள்ள அதிமுக நிா்வாகிகளும் கடையநல்லூா் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யவேண்டிய நிலை உள்ளதால் கடையநல்லூா் தொகுதிக்கு விருப்ப மனு தாக்கல் செய்துள்ள அதிமுகவினா் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
இத்தொகுதியில் போட்டியிட தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கிருஷ்ண முரளி, ஒன்றியச் செயலா்கள் செல்லப்பன், முத்துப்பாண்டியன் , நகரச் செயலா் எம்.கே.முருகன், முன்னாள் நகரச் செயலா் கிட்டுராஜா, தணிக்கையாளா் நாராயணன், அச்சன்புதூா் பேரூா் செயலா் சுசிகரன், சுந்தரையா, முகைதீன்பிச்சை, வெங்கடேசன் உள்பட நூற்றுக்கணக்கானோா் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனா்.