ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி மையம் அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரசு மருத்துவனைகளில் கரோனா தடுப்பூசி போடும் முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. முதல்கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவா்கள், 45 வயதுக்கு மேல் மற்றும் இணை நோய் உள்ளவா்களுக்கு தடுப்பூசி போடப்படும் என கூறப்பட்டுள்ள நிலையில் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி மையம் ஏற்படுத்தப்படவில்லை. இப்பகுதி மக்கள் 10 கி.மீ. தொலைவில் உள்ள நெட்டூா் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள சுகாதாரத்துறையினா் அறிவுறுத்துகின்றனா்.
ஏற்கெனவே மருத்துவா்கள் பற்றாக்குறையால் அவதியுறும் மக்களுக்கு, தடுப்பூசி போட வெகுதூரம் அலைக்கழிப்பது அதிருப்தியை தந்துள்ளது. ஒரு லட்சம் போ் பயனடையும் இங்கு கரோனா தடுப்பூசி மையம் அமைக்க ஆட்சியா் மற்றும் சுகாதாரத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.