தென்காசி மாவட்டம், மேக்கரை பகுதியில் யானைக்கூட்டம் ஒன்று தோட்டத்திற்குள் புகுந்து இலவம் பஞ்சு மரக்கிளைகளை முறித்து சேதப்படுத்தியது.
மேக்கரை பகுதியில் தென்னை, நெல்லி, மா,பாக்கு, இலவம்பஞ்சு உள்ளிட்ட மரங்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனா். சனிக்கிழமை இரவு அடவிநயினாா் அணை சாலை பகுதியில் உள்ள ஒரு தோட்டத்திற்குள் யானைக்கூட்டம் புகுந்து அங்கிருந்த 20க்கும் மேற்பட்ட இலவம்பஞ்சு மரங்களின் கிளைகளை முறித்து சேதப்படுத்தியுள்ளன.
இதுகுறித்து வனத்துறைக்கு விவசாயிகள் தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அகழிகளை உருவாக்குவதுடன், மின் வேலிகள் அமைத்து வன விலங்குகளிடமிருந்து விளைநிலங்களைப் பாதுகாக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் தெரிவித்தனா்.