சங்கரன்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை திடீரென்று சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் மரங்கள் முறிந்து விழுந்தில் பைக் சேதமானது.
சங்கரன்கோவிலில் கடந்த சில நாள்களாக கடுமையான வெயில் நிலவியது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 மணி அளவில் திடீரென்று இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது சூறாவளி காற்றும் சுழன்று அடித்ததால் ராஜாபாளையம் சாலையில் பொன்விழா மைதானத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த தகரங்கள் காற்றில் சரிந்து விழுந்தன. சில இடங்களில் தகரங்கள் காற்றில் பறந்தன. 7.45 மணி வரை சுமாா் 1 மணி நேரம் நீடித்த இந்த மழையால் நகரில் 2 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
மேலும், கோமதியாபுரம் 1ஆம் புதுத்தெருவில் புளியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சங்கரலிங்கம் மகன் ராமையா என்பவரது பைக் மீது மரம் முறிந்து விழுந்து லேசான சேதமடைந்தது.
இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இத்தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலா் விஜயன், ஏட்டுகள் கருப்பையா, வேல்சாமி மற்றும் வீரா்களுடன் சென்று மரம் அறுக்கும் இயந்திரம் மூலம் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தி பைக்கை மீட்டனா்.
சுரண்டை: சாம்பவா்வடகரையில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் நிலவிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் இரவு 7 மணிக்கு திடீரென பலத்த மழை பெய்தது. சுமாா் 1 மணி நேரம் நீடித்த மழையால் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெப்பம் தணிந்து இதமான சீதோஷ்ணம் நிலவியது.