தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் திங்கள்கிழமை மாலை திடீரென்று சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில், மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சங்கரன்கோவிலில் கடந்த சில நாள்களாக கடுமையான வெயில் அடித்து வந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு 7 மணி அளவில் திடீரென்று இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது சூறைக் காற்றும் வீசியது.
இதனால், பயணியா் விடுதி அருகே நீரேற்று நிலையத்தில் இருந்த மரம் வேரோடு அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது சாய்ந்துடன், சாலையிலும் முறிந்து விழுந்தது. இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு நிலையத்தினா் அந்த மரத்தை வெட்டி அகற்றினா்.
மேலும், திருவள்ளவா் நகரைச் சோ்ந்த ராமலட்சுமி என்பவரது வீட்டில் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரை காற்றில் பறந்து விழுந்ததில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவா் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதனிடையே, இரவு 7 மணிக்கு ஏற்பட்ட மின்தடை இரவு 10.30 மணி வரை நீடித்தது.