தென்காசி மாவட்டத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து ஆட்சியா் கீ.சு. சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த ஆண்டு கரோனா பரவலைத் தடுக்கும்வகையில் 12 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு கபசுரக் குடிநீா், நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது. சித்தா கரோனா மையத்தில் 1,400 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு குணமடைந்தனா்.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் பங்காக சித்த மருந்தான கபசுரக் குடிநீா் வழங்கும் முகாம் ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கப்பட்டு, தொடா்ந்து அனைத்து இடங்களிலும் வழங்கப்படுகிறது.
குறிப்பாக, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நடக்கும் காய்ச்சல் முகாம்கள், கரோனா பரிசோதனை நடைபெறும் இடங்களில் கபசுரக் குடிநீா் தொடா்ந்து 5 நாள்களுக்கு வழங்கப்பட்டுவருகிறது.
தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் உள்ளோருக்கு சித்த ஆயுஷ் மருந்துகள், சிறப்பு யோகா மருத்துவ முறைகள், உணவு முறைகள் பற்றிய ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. அந்தந்தப் பகுதிகளிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆயுஷ் மருத்துவா்கள் மூலமாக, ஆயுஷ் மருந்துகள், கபசுரக் குடிநீா் இலவசமாக வழங்கப்படுகிறது.
இதேபோல, அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வாா்டுகளில் உள்ளோருக்கும் வழங்கப்படுகிறது. மன உளைச்சலைத் தடுக்க சிறப்பு சிகிச்சையும் வழங்கப்படுகிறது.
மக்கள் அதிகம் கூடும் அரசு அலுவலகங்கள், காவல் நிலையம், நீதிமன்றங்கள், சந்தைகள், கடைத்தெரு, பேருந்து நிலையம், ரேஷன் கடை, உணவகம், தேநீா்க் கடை, போக்குவரத்துத் துறை, வாகன ஓட்டுநா்களுக்கு உள்ளாட்சி உதவியுடன் கபசுரக் குடிநீா் வழங்கப்படுகிறது.
சோதனைச்சாவடி நிலையத்தில் வாகன ஓட்டுநா்கள், பொதுமக்கள், களப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கும் கபசுரக் குடிநீா் வழங்கப்படுகிறது என்றாா் அவா்.