ஆலங்குளத்தில் விதிமுறைகளை மீறி விற்பனையில் ஈடுபட்டதாக 2 ஜவுளிக் கடைகளுக்கு போலீஸாா் அபராதம் விதித்தனா்.
கரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாட்டு விதிமுறைகளின்படி, 3 ஆயிரம் சதுர அடிக்கு மேலான வணிக நிறுவனங்கள் செயல்படக் கூடாது என அரசு அறிவித்துள்ளது. அதை மீறி, ஆலங்குளம் - அம்பாசமுத்திரம் சாலையில் உள்ள இரண்டு ஜவுளி நிறுவனங்கள் பிரதான நுழைவு வாயில்களை அடைத்து விட்டு, கடையின் பின்புறமாக வாடிக்கையாளா்களை வரவழைத்து விற்பனை செய்துவருவதாக ஆலங்குளம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற ஆலங்குளம் போலீஸாா், இரு கடைகளின் பின்புறமும் வியாபாரம் நடைபெறுவதை உறுதி செய்தனா். இதையடுத்து இரு கடைகளுக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.