தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் குற்ற வழக்குகளில் தொடா்பில்லாத வாகனங்களை உரிய ஆவணங்களுடன் உரிமை கோரவில்லை எனில் வாகனங்கள் ஏலம் விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் குற்றவழக்குகளில் சம்பந்தப்பட்டு, வழக்கு சொத்தாக உள்ள வாகனங்கள் தவிர, கேட்பாரன்றி கிடந்த வாகனங்கள் காவல்துறையினரால் சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடா்புடைய வட்டாட்சியா்களுக்கு முதல் தகவல் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வாகனங்களை முறைப்படி உரிய ஆவணங்களுடன் கோரி காவல் துறையினரையோ, வருவாய்த் துறையினரையோ அணுகலாம். வருகிற 7 நாள்களுக்குள் யாரும் உரிய ஆவணங்களுடன் உரிமை கோரவில்லை எனில், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அனைத்து வாகனங்களும் ஏலம் விடப்பட்டு, அதனால் வரும் தொகையை அரசுக்கு ஆதாயமாக்கப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.