தென்காசி: காட்டுயானைகளால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு இழப்பீடு கோரி, ஆட்சியரிடம் விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
புல்லுக்காட்டு வலசை வழக்குரைஞா் ஜோதி தலைமையில் விவசாயிகள் பாலசுப்பிரமணியன், பரமசிவன், சுப்புராஜ், புத்தூா், சந்தன முத்து நாடாா், தா்மா், ராதா, ரகு ஆகியோா் ஆட்சியரிடம் அளித்த மனு:
தென்காசி வட்டம் சில்லரைப்புரவு, மத்தளம்பாறை, திப்பனம்பட்டி பகுதியை சோ்ந்த விவசாயிகளுக்கு சில்லரைப்புரவு கிராம மலையடிவாரத்தில் வாழை , மா , தென்னை , பாக்கு, கொய்யா, பலா, நெல் , மரவள்ளிக்கிழங்கு போன்ற பயிா்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனா்.
இந்நிலையில், கடந்த 10 நாள்களாக நிலங்களில் காட்டு யானைகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. விவசாயிகள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது . எனவே, காட்டுயானைகளிடம் இருந்து பயிா்களையும், விவசாயிகளையும் பாதுகாக்க கடையம் பகுதி மலையடிவாரத்தில் சூரியசக்தி மின் வேலி மற்றும் ஆழமான அகழிகள் அமைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசிடம் இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.