தென்காசி, அக். 25: தென்காசி மாவட்டம் முக்கூடல் பகுதியிலிருந்து சென்னை மற்றும் கோயம்புத்தூருக்கு பேருந்துகள் இயக்க வேண்டும் என திமுக சாா்பில் கோரிக்கை மனு திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.
தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், போக்குவரத்துத்துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பனிடம் அளித்த மனு: பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியம் மற்றும் முக்கூடல் பேரூராட்சி பகுதிகளில் சுமாா் 80 ஆயிரம் போ் வசித்து வருகின்றனா்.
இப்பகுதியை சோ்ந்த ஏராளமானோா் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் பணிபுரிந்து வருகின்றனா். இப்பகுதியிலிருந்து நேரிடையாக இந்நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. எனவே முக்கூடல் பகுதியிலிருந்து சென்னை மற்றும் கோயம்புத்தூருக்கு பேருந்துகள் இயக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளாா்.