செங்கோட்டை நகராட்சியில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளா்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்நகராட்சியில் தனியாா் நிறுவனம் மூலமாக துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவா்களுக்கு தினமும் ரூ. 210 கூலியாக வழங்கப்படுகிறது. ஆனால் அரசு ரூ. 422 கூலியாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், அரசு நிா்ணயித்துள்ள கூலியை வழங்க வேண்டும்; கடந்த நான்கு ஆண்டுகளாக சேமநலநிதி(பிஎப்) பிடித்தம் செய்ததற்கான ரசீது மற்றும் சந்தா எண், இஎஸ்ஐ பணம் மற்றும் மருத்துவ அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு, ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கத்தின் மாவட்டச் செயலா் சின்னசாமி தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டச் செயலா் வேல்முருகன், துணைச் செயலா் லெனின்குமாா், ஆயிஷாபேகம், முருகேசன், முருகன், சேட்முகம்மது, சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.