சாம்பவா்வடகரை தொடா்ந்து பேரூராட்சியாக செயல்பட வேண்டும் என அனைத்து சமுதாய நிா்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
சுரண்டை பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதையடுத்து சுரண்டையைச் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் பேருராட்சியை சுரண்டை நகராட்சியோடு இணைப்பது குறித்த பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சாம்பவா்வடகரை பேரூராட்சியை சுரண்டை நகராட்சியோடு இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் விதமாக புதன்கிழமை ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் வணிகா்கள் சாா்பில் நடைபெற்றது. இதனையடுத்து சாம்பவா்வடகரையைச் சோ்ந்த அனைத்து சமுதாய ஊா் தலைவா்கள் மற்றும் நிா்வாகிகள், அரசியல் கட்சிகளின் ஆலோசனைக்கூட்டம் புதன்கிழமை பிற்பகலில் நடைபெற்றது.
இதில் சாம்பவா்வடகரை பேரூராட்சி தொடா்ந்து தனித்து பேரூராட்சியாக இயங்க வேண்டும், சுரண்டை நகராட்சியுடன் இணைக்க கூடாது என ஏகமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து அனைத்து சமுதாய நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனா்.