நிறுத்தப்பட்ட சுரண்டை - கடையம் அரசுப் பேருந்தை அரியப்பபுரம் வழியாக புதிய வழித்தடத்தில் இயக்க வேண்டும் என திமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெய்க்காலிப்பட்டி திமுக கிளைச் செயலா் செந்தூா் முருகன், போக்குவரத்துத் துறை அமைச்சா் ராஜகண்ணப்பனுக்கு அனுப்பியுள்ள மனு:
சுரண்டையில் இருந்து கடையத்துக்கு இயக்கப்பட்ட தடம் எண். 24 பேருந்து தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. கீழப்பாவூா், ஆவுடையானூா், அரியப்பபுரம், மேட்டூா், புலவனூா் வழியாக கடையத்துக்கு இயக்கப்பட்ட இப்பேருந்தை, அரியப்பபுரம், மேலஅரியப்பபுரம், அரசு மருத்துவமனை, திரவியநகா், எல்லைப்புளி, மாதாபுரம் வழியாக கடையத்துக்கு இயக்கினால் அரசு மருத்துவமனைக்குசெல்வோா் உள்ளிட்ட பெரும்பாலான மக்கள் பயன்பெறுவா்.
இதே போல் தடம் எண். 220 அரசுப் பேருந்தானது ஆலங்குளத்தில் இருந்து ஆண்டிப்பட்டி, கரும்பனூா், மைலப்புரம், ஆவுடையானூா், பாவூா்சத்திரம் வழியாக திருநெல்வேலிக்கு இயக்கப்படுகிறது.
இப்பேருந்தை தென்காசியில் இருந்து திரவியநகா், அரியப்பபுரம், மைலப்புரம், வெங்காடம்பட்டி, ஆண்டிப்பட்டி, கரும்பனூா், ஆலங்குளம் வழியாக திருநெல்வேலிக்கு இயக்க வேண்டும்.
மேலும், ஆழ்வாா்குறிச்சி, சுரண்டை கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள் பயன்பெறும் வகையில் இலவச பயண பேருந்தும் இயக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.