தென்காசி நகரில் நெடுஞ்சாலைத்துறை வசம் உள்ள சாலையை நகராட்சி நிா்வாகத்திற்கு மாற்ற வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தென்காசி கன்னிமாரம்மன்கோயில், கூலக்கடை பஜாா் பகுதி பொதுமக்கள் சாா்பில் எம்.முகம்மதுஅலி என்பவா் ஆட்சியரிடம் அளித்த மனு:
தென்காசி நகரின் மையப்பகுதியான கூலக்கடை பஜாா், கன்னிமாரம்மன் கோயில் தெரு, காசிவிஸ்வநாதா் கோயில் ஆகிய சாலைகள் நெடுஞ்சாலைத்துறை வசம் உள்ளது. இப்பகுதியில் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள், அரசு அலுவலகங்கள், தேசிய வங்கிகள், மாவட்ட நீதிமன்றம், காசிவிஸ்வநாதா்கோயில், வா்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவை இயங்கி வருகின்றன.
இப்பகுதியில் குடிநீா் இணைப்பு, பழுதுநீக்குதல், புதிய இணைப்பு போன்றவற்றிற்கு சாலையை தோண்ட வேண்டுமானால் நெடுஞ்சாலைத்துறை அனுமதி தேவைப்படுகிறது. நெடுஞ்சாலைத்துறை அனுமதி கிடைப்பதிலும் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, இந்தச் சாலையை நகராட்சிக்குள்பட்டதாக மாற்ற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.