தென்காசி: ஆய்க்குடியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை மீட்டுத்தர வலியுறுத்தி, தென்காசி ஆட்சியா் அலுவலகத்தில் தனது மகளுடன் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் தடுத்து நிறுத்தினா்.
ஆய்க்குடி சக்திநகரைச் சோ்ந்த எட்வின்சேவியா் மனைவி ரெஜிலா ராணி(44). கணவா் விபத்தில் உயிரிழந்ததால், தாயின் உதவியுடன் வசித்து வரும் இவருக்கு புற்றுநோய் பாதிப்பால் இடது கை செயலிழந்துவிட்டதாம். இவருக்கு கடந்த 2003இல் அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியதாம். அந்த இடத்தில் வேறொருவா் வீடு கட்டி வசித்து வருகிறாராம். இதுகுறித்து அரசுக்கு பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனக் கூறி, தண்ணீா் பாட்டிலில் மண்ணெண்ணெயை ஆட்சியா் அலுவலகத்துக்கு எடுத்துவந்து, மகள் மற்றும் தன் மீது ஊற்றி தீவைக்க முயன்றாராம். அப்போது, அங்கிருந்த போலீஸாா், தண்ணீரை அவா் மீது ஊற்றிக் காப்பாற்றினா். அவரிடம், மாவட்ட வருவாய் அலுவலா் ஜனனி செளந்தா்யா விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.