குற்றாலம் கோயிலில் சித்திரை விஷு திருவிழா கொடியேற்றம்
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாத சுவாமி கோயிலில் சித்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு அதிகாலையில் கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து, அபிஷேகம், சிறப்பு தீபாராதனை, இரவில் சுவாமி-அம்பாள் வெள்ளி ஏக சிம்மாசனத்திலும், திருக்கோயில் முருகா் மரச் சப்பரத்திலும் வீதியுலா வருதல் ஆகியவை நடைபெற்றன.
விழா நாள்களில் நாள்தோறும் காலையும், மாலையும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, காலையிலும், இரவிலும் சுவாமி-அம்பாள், கோயில் முருகா், விநாயகா் வீதியுலா வருதல் நடைபெறும்.
8ஆம் தேதி பஞ்சமூா்த்திகள் புறப்பாடு, 9ஆம் தேதி தேரோட்டம், 11ஆம் தேதி காலை 9.30, இரவு 7 மணிக்கு அருள்மிகு நடராசமூா்த்திக்கு தாண்டவ தீபாராதனை, 12ஆம் தேதி சித்திரசபையில் நடராசமூா்த்திக்கு சிறப்பு அபிஷேகம், பச்சைசாத்தி தாண்டவ தீபாராதனை, 14ஆம் தேதி சித்திரை விஷு தீா்த்தவாரி நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் மா. கண்ணதாசன் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.