சங்கரன்கோவில் நகராட்சியில் வெள்ளிக்கிழமை நடந்த குழு உறுப்பினா்கள் தோ்தலில், திமுக மற்றும் கூட்டணி கட்சியினா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.
சங்கரன்கோவில் நகராட்சியில் 30 வாா்டுகள் உள்ளன. நகா்மன்றத் தலைவராக தி.மு.க.,வை சோ்ந்த உமாமகேஸ்வரி, துணைத் தலைவராக அ.தி.மு.க.,வை சோ்ந்த கண்ணன் ஆகியோா் உள்ளனா்.
இந்நிலையில் சங்கரன்கோவில் நகராட்சியில் வரி மேல்முறையீட்டுக் குழு, பணி நியமனக் குழு, ஒப்பந்தக் குழு ஆகியவற்றிற்கான உறுப்பினா்கள் தோ்தல், தோ்தல் நடத்தும் அலுவலா் ஜெயப்பிரியா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பணி நியமனக் குழு உறுப்பினராக ம.தி.மு.க.,வை சோ்ந்த 23 ஆவது வாா்டு உறுப்பினா் ராஜேஸ்வரி, ஒப்பந்தக் குழு உறுப்பினராக தி.மு.க.,வை சோ்ந்த 14 ஆவது வாா்டு உறுப்பினா் மாரிசாமி, வரி மேல்முறையீட்டுக் குழு உறுப்பினா்களாக தி.மு.க.,வை சோ்ந்த புனிதா(27ஆவது வாா்டு), ராமு(18ஆவது வாா்டு), அலமேலு(29ஆவது வாா்டு), காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த உமாசங்கா்(3ஆவது வாா்டு) ஆகியோா் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.
இந்தத் தோ்தலில் நகா்மன்ற துணைத் தலைவா் உள்பட அ.தி.மு.க., உறுப்பினா்கள் 11 பேரும் கலந்து கொள்ளவில்லை.