கடையம் பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் 12ஆவது தாமிரவருணி நீர்நிலை வாழ் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.
வாகைக்குளத்தில் பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள்
வாகைக்குளத்தில் பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள்

அம்பாசமுத்திரம்: தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் 12ஆவது தாமிரவருணி நீர்நிலை வாழ் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு வனத்துறை ஒருங்கிணைப்பில் மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள் சார் இயற்கைவளக் காப்பு மையம், தூத்துக்குடி முத்துநகர் இயற்கைச் சங்கம் மற்றும் திருநெல்வேலி நெல்லை இயற்கைச் சங்கம் ஆகிய அமைப்புகள் இணைந்து திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரவருணி நீர்நிலையில் உள்ள பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளன. இதையடுத்து 12ஆவது பறவைகள் கணக்கெடுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கணக்கெடுப்பில் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த தன்னார்வலர்களுக்கு இணையம் மூலம் வியாழக்கிழமை பயிற்சி வழங்கப்பட்டதையடுத்து வெள்ளிக்கிழமை மூன்று மாவட்டங்களிலும் உள்ள சுமார் 60 குளங்களிலும் தன்னார்வலர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு சுற்றுச் சூழல் நிபுணர்கள் தலைமையில் பறவைகள் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெறுகின்றன. கடையம் பகுதியில் உள்ள அய்யம்பிள்ளை குளம், வாகைக்குளம் ஆகிய குளங்களில் சுற்றுச் சூழல் ஆர்வலர் ரமேஷ் தலைமையில் பறவைகள் கணக்கெடுப்புப் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.
வாகைக்குளத்தில் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை உள்நாட்டுப் பறவைகள் மட்டுமின்றி வட இந்தியா மற்றும் வெளிநாட்டிலிருந்து வரும் சில வலசைப் பறவைகளும் வந்து தங்கி இனப்பெருக்கம் செய்து வருகின்றன. நிகழாண்டு வடகிழக்குப் பருவ மழை கூடுதலாக பெய்ததையடுத்து வாகைக்குளம், அய்யம்பிள்ளை குளம் ஆகிய குளங்களில் ஏராளமான பறவைகள் வந்து கூடு கட்டி குஞ்சு பொறித்துள்ளன.

கணக்கெடுப்பில் கலந்து கொண்ட தன்னார்வலர் முப்புடாதி கூறும்போது, நான் சென்னையில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறேன். பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறுவதாக வந்த அறிவிப்பைத் தொடர்ந்து இதில் நாங்கள் கலந்து கொண்டேன். நாள்தோறும் பறவைகளைப் பார்த்து வருகிறோம். அதில் வெள்ளையாக இருந்தால் கொக்கு, கருப்பாக இருந்தால் காகம் என்று மட்டும் நினைத்து கடந்துவிடுவோம். இன்று பறவைகள் குறித்தக் கணக்கெடுப்பில் கலந்து கொண்ட பின் இத்தனை வகையான பறவைகள் உள்ளதை அறிந்து கொண்டோம். ஒவ்வொரு பறவையும் அவற்றுக்கென தனித்தனி குணாதிசயங்களுடன் தனது இனத்தைப் பெருக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதொடு இயற்கையை காக்கும் பணியையும் செய்து வருகின்றன என்றார்.

பெனிஸ் ராஜ் கூறும்போது, பல்வேறு இடங்களில் இருந்து வந்துள்ள பல்வேறு வகையான பறவைகளை அதிகாலை நேரத்தில் பார்ப்பது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு கூழைகிடா, நாமக்கோழி, கானாங்கோழி, வெள்ளை அரிவாள் மூக்கன், ஊல் அல்லிக்குருவி, சிவப்பு ஆள்காட்டிக் குருவி, பாம்புத் தாரா உள்ளிட்ட பல்வேறு வகையான பறவைகள் கூடுகட்டியுள்ளன. பறவைகளைப் பாதுகாப்பதால் இயற்கையை பாதுகாக்கலாம் என்பதை தெரிந்து கொண்டோம் என்றார்.

இரண்டு நாள்கள் கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடைந்த பின் தொடர்ந்து பறவைகள் எண்ணிக்கைக் குறித்து தெரிவிக்கப்படும். பறவைகள் கணக்கெடுப்புப் பணிகளுக்கான ஏற்பாடுகளை மணிமுத்தாறு அகஸ்தியமலை மக்கள் சார் இயற்கைவளக் காப்பு மையம் ஒருங்கிணைப்பாளரும் மூத்த ஆய்வாளருமான மதிவாணன் தலைமையில் ஆராய்ச்சியாளர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com